பசுவும் புண்ணியங்களும்

பசுவும் புண்ணியங்களும்


குழந்தை பாக்கியம் பெற……
கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள்பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.

திருமணம் நடைபெற……. நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறாதிருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமைய வில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற்றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும்.

ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வும்,கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

வியாதி நீங்க:- ரோகம்,வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜை யினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

பிதுர் சாபம் தீர:-. பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.

பசு மடம்………. கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பலப்பல நன்மைகளைத் தருகிறது. கேட்ட வரத்தை நல்கும் பசுவை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்டவாறு கூறுகிறது:-

பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோயிலாகவே கருதினர். இதனை “ஆக்கோட்டம்” என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசுமடத்தினை விதிப்படி செய்விக்க வேண்டும். அதாவது,ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப்பகுதியை அமைக்க வேண்டும்.

முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற்றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்க வேண்டும். நாள் தோறும் கோசல, கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும். சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தை யோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.

நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்து அளித்து பேண வேண்டும். அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி,பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும். வேனிற் காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்காலத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.

பால்கறத்தல்……. கன்று பால் உண்டு காம்பை விடுத்த பின், தண்ணீரால் காம்பை கழுவி பாலைக்கறக்க வேண்டும். ஆசை மிகுதியினால் கன்றுக்கு பால்விடாமல் கறந்தவன் நரகத்தில் விழுந்து நெடுங்காலம் வருந்தி, பூமியிலே பிறந்து கடும் பசியினாலே வீடுகள் தோறும் இறப்பான். கபிலை இனப்பசுவின் பாலைச்சிவபூஜைக்கு கொடுக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது.

அதனை மனிதர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. மலட்டுப் பசுவின் மீதோ, இடபத்தின் மீதோ பாரம் ஏற்றினோர் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவர்ந்து சென்றால் தங்கள் உயிரைக் கொடுத்தேனும் அவற்றைக் காக்க வேண்டும் என்று சான்றோர்கள் கூறியுள்ளனர்.

பசுக்களுக்குத்தீமை செய்தல் கூடாது…….. பசுக்களை ஓட்டிச் செல்லும் போது சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடு பலாசங்கோலினை மெல்ல ஓங்கி போ போ என்று ஓட்டிச் செல்ல வேண்டும். இரக்க மின்றி கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்தில் வீழ்வர். பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும்,பூஜை செய்யாத வர்களும்,காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வார்கள்.

பசுவின் குருதியானது ஒரு துளி இப்புவியில் விழுந்தாலும் அதிலிருந்து பல கோடி அசுரர்கள் வந்துதித்து உலகை நாசம் செய்வர் என்று வேதம் கூறுகிறது. எனவே பசுக்களுக்கு எவ்விதத் தீங்கும் செய்தல் கூடாது. ஆவுரிஞ்சுக்கல் நாட்டுதலும், சிவனுக்கும், ஆச்சாரியருக்கும் பசுவைத்தானம் செய்தலும் வேண்டும்.

குற்றமற்ற பசுக்களை இடபத்தை சிவசந்நிதிக்கும் தானம் செய் தலும்,சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும் வேண்டும்.இளைத்த பசுவை வாங்கி வளர்த்தலும் பெரும் புண்ணியம் தரும். பசுவைக் கொன்றவனும், கொலைக்காகக் கொடுத்தவனும், அதன் இறைச்சியைத்தின்றவனும் துயரில் அழுந்துவார்கள்.எனவே பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதை நாம் தடுக்க வேண்டும்.

கோயிலுக்குச் செல்பவர்கள் கோயிலிëன் பசு மடத்திலுள்ள பசுக்களுக்கு அகத்திக் கீரை,பசும்புல், பழங்கள் உள்ளிட்ட தீவனங்களை அளிக்க வேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு சிகிச்சைக்கான செலவினையும் ஏற்றுக் கொண்டால் நாமும் ஆரோக்கியமான வாழ்வைக் பெறலாம்.

பசுவும் புண்ணியங்களும்……..

*பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணிம் கிடைக்கும்.

*பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

*பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும்( கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும்( கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

*பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான வேளை ஆகும்.

*பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

*`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிëக்கு மங்களத்தைத் தருகிறது.

*பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

*மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவே தான், ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது.

*ஒருவர் இறந்த பின் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசுதானம் செய்தவர்களுக்கு இத்துன்பம் நேர்வதில்லை.அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்ற,அதன் வாலைப் பிடித்துக் கொண்டு வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

*உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்விதப் பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிக ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.

*கறவை நின்ற வயதான பசுக்களைக்கூட நாம் பேணிக் காக்க வேண்டும். *பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு இணையாக பசு ஹத்தி தோஷத்தையும் நம் வேதங்கள் குறிப்பிடுகின்றன

via Blogger http://ift.tt/1tC0jiv

Leave a comment