ரயில் பயணிகளுக்கு அடித்தது யோகம் : பணம் இல்லாமலே ‘டிக்கெட் புக்’ செய்யலாம்

ரயில் பயணிகள், ஆன் – லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, இனி, முன் கூட்டியே பணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. முதலில் பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, டிக்கெட்டை கையில் பெறும் போது, பணம் செலுத்தும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் போக்குவரத்து தேவையை ரயில்வே துறை பூர்த்தி செய்து வருகிறது. ரயில்வே துறையின் சார்பில் இயங்கும் டிக்கெட் கவுன்டர்கள் தவிர, ஆன் – லைன் முறையிலும் பயணிகள் தங்கள் பயணத்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் வழங்கி வருகிறது.இந்த முறையில், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி மட்டுமே இதுவரை டிக்கெட் புக்கிங் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த வசதிகள் இல்லாத நபர்களும் ஆன் – லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி, பயண தேதிக்கு, ஐந்து நாட்கள் முன்பாக, பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை ஆன் – லைனில் புக் செய்யலாம். அப்போதே அதற்கான பணம் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின், பயணியின் முகவரிக்கு, புக் செய்த டிக்கெட் அனுப்பி வைக்கப்படும். அதை ‘டெலிவரி’ செய்யும் நபரிடம், டிக்கெட்டுக்கான தொகையுடன், கூடுதலாக சேவைக் கட்டணத்தை செலுத்தி பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்டுக்கு, பயண டிக்கெட்டை விட கூடுதலாக, 40 ரூபாயும், ஏசி வகுப்பு டிக்கெட்டுக்கு கூடுதலாக, 60 ரூபாயும் சேவைக்கட்டணமாக வசூலிக்கப்படும்.                              
‘புக்மைட்ரைன் டாட் காம்’ என்ற வெப்சைட்டில் பயணிகள் தங்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன் மூலம், கிரெட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பாங்கிங் இல்லாதவர்களும் ஆன் – லைன் முறையில் ரயில் பயண டிக்கெட்டை முன் பதிவு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சேவையை தற்போதைக்கு, 200 முக்கிய நகரங்களில் வழங்க ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Leave a comment